தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி
திறக்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்)
தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.
பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம் தேதி முடிகிறது. இதைத்
தொடர்ந்து ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு, இறுதி
தேர்வுகள் நடைபெறவுள்ளன.
ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஏப்.6 முதல் 16-ம் தேதி வரையிலும், 6 முதல் 9 வகுப்பு
வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதி வரையிலும் தேர்வுகள்
நடைபெறும்.
இதையடுத்து 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ம் தேதி முதல் கோடை
விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
எனினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு
சற்று தள்ளிப்போக வாய்ப்பு இரு்ப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக
தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறைவிடப்படுகிறது.
பள்ளிகள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள
வேண்டியுள்ளது தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு
முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் 48
நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் பதிவிறக்கம்
இதனிடையே வினாத்தாள் பதிவிறக்கம் குறித்த வழிகாட்டு தலை மாவட்டக் கல்வி
அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பிய
சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு மூன்றாம்
பருவத் தேர்வுகள் (முழு ஆண்டுத் தேர்வு) ஏப்.1 முதல் 16-ம் தேதி வரை நடைபெற
உள்ளன.
இதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டு, தேர்வு நடத்துவதற்கான
அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்வுக்கான
வினாத்தாள்களை பள்ளிகள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டு
நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.
அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் பயிற்றுமொழி மற்றும் பாடவாரியாக
வினாத்தாள்களை உரிய எண்ணிக்கையில் நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
மூலமாக வழங்க வேண்டும். வினாத்தாளை எமிஸ் தளத்தில் மார்ச் 30-ம் தேதி வரை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
