முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் டிஆர்பி தீவிரம்
அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை
ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்டபடி
தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது செட்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு யுஜிசி சார்பிலும் செட்
தகுதித் தேர்வு அந்தந்த மாநில அளவிலும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில்
செட் தேர்வு நடத்தும் பொறுப்பு தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி
வரை நடத்தப்பட்ட ‘செட்’ தகுதித்தேர்வு முடிவு ஏறத்தாழ 3 மாதங்கள் ஆகியும்
இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. செட் தேர்வு முடிவு வந்தவுடன்
அடுத்தகட்டமாக உதவி பேராசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தப்பட
வேண்டும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்ததவர்கள் அதற்காக முழு
மூச்சில் தயாராகி வரும் நிலையில், செட் தேர்வுக்கான முடிவு
அறிவிக்கப்படாமல் இருப்பது அவர்களை சோர்வடையச் செய்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம்
கேட்டபோது, “செட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
வழக்கு நிறைவடையும் தருவாயில் உள்ளது. வழக்கு முடிவுக்கு வந்தவுடன் செட்
தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டு அதைத்தொடர்ந்து உடனடியாக உதவி
பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும்” என்றார்.
அந்த அதிகாரி மேலும் கூறும்போது, “முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,915
இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில்
தேர்வு நடத்தப்படும் என வருடாந்திர தேர்வு அட்டவணையில்
அறிவிக்கப்பட்டது. அதன்படியே முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு
ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்
தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
முதுகலை ஆசிரியர் பணிக்கு கூடுதல் காலியிடங்கள் கேட்கப்பட்டுள்ளன. எனவே,
காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வு புதிய
பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும்” என்றார்.
டெட் தேர்வு இல்லை: இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 2022-க்கு பிறகு கடந்த 3
ஆண்டாக ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தப்படாதது இடைநிலை
ஆசிரியர்களையும் பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களையும் கவலையில்
ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்துகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்டி
ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி,
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ‘சி-டெட்’ தகுதித்தேர்வு ஆண்டுக்கு 2
முறை திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏனோ
அதுபோன்று டெட் தேர்வை ஆண்டுதோறும் நடத்துவதில்லை.
மேலும் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் டெட்
தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு டெட் தேர்வு
நடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது அரசு பள்ளிகளில் பதவி
உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டாக டெட்
தேர்வு நடத்தப்படாததால் ஆசிரியர் பணியில் சேருவோர் மட்டுமின்றி,
ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற முடியாமல் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு சி-டெட்
தேர்வு போல் டெட் தேர்வையும் ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.